
காங்கிரஸ் அரசு செய்த தவறுகளை எடுத்துச் சொல்வது, காந்தி, நேரு போன்ற மக்கள் தலைவர்களை இழிவுப்படுத்துவதிலேயே 10 ஆண்டுகள் பாஜக ஒன்றிய அரசு காலம் தள்ளிவிட்டது.
கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் பெட்ரோலியப் பொருட்கள் தொடங்கி எல்லாப் பொருட்களின் விலையும் ஏறிக் கொண்டே வருகின்றன.
உழைக்கும் மக்களின் ஊதியம் கடந்த 10 ஆண்டுகளில் உயரவில்லை என்பதைப் பல ஆய்வு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.எஸ்.எஸிற்கு நெருக்கமான தலைவர் திரு.சுப்பிரமணியசாமி மோடி அரசு பின்பற்றி வருகிற உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கையால் இந்தியப் பொருளாதாரமும், இந்திய நாட்டின் சுயமரியாதையும் உலகளவில் வீழ்ச்சி அடைந்து வருவதாக நாள்தோறும் ஊடகங்களில் பேசிவருகிறாரே?
அதானி வளர்ச்சிக்கு மட்டுமே பிரதமர் மோடி பாடுபடுகிறார் என்று வெளிப்படையாகவே சாமி குற்றம் சுமத்துகிறாரே? ஏன் பாஜக தலைவர்கள் இதற்குப் பதில் தரவில்லை.
திரு.சுப்பிரமணியசாமி குறிப்பிட்டு வரும் கருத்து உண்மைதான் என்று மெய்ப்பிக்கும் வகையில், 2025 ஏப்ரல் 3 நாள் இந்து நாளிதழில் Modi’s visit great opportunity for India and Sri Lanka (பக்கம் -14)
இலங்கை அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் விஜிதா ஹெரத் பிரதமர் மோடியின் பயணம் இந்தியா( Vijitha Herath) இலங்கை நாடுகளுக்கு பெரும் வாய்ப்பை அளிக்கும்
என்ற தலைப்பு செய்தி உறுதி செய்கிறதே!
இந்தியா பெறப்போகும் பெரும் நன்மை தான் என்ன? இந்து நாளிதழ் ஊடகவியலாளர் மீரா சீனுவாசன் ஐந்து கேள்விகளை இலங்கை அமைச்சர் விஜிதாவிடம் எழுப்பியுள்ளார்.
5 வது கேள்வி :
இலங்கையில் ஆட்சியில் உள்ள புதிய அரசு அதானி காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்து உள்ளதே?
இலங்கையில் உள்ள சிலர் இதனால் அன்னிய முதலீடும் இந்திய நட்புறவில் பாதிப்பும் ஏற்படும் என்று அச்சம் தெரிவித்துள்ளார்களே ?
வெளியுறவு அமைச்சர் விஜிதாவின் பதில்:
அதானி மின் உற்பத்தி தொழிற்சாலையைப் பொறுத்தவரை அதிக விலை கேட்பது மட்டும் தான். மற்றொரு அதானி தொழில் முதலீடு நன்றாக நடந்து வருகிறது.
கொழும்பு துறைமுகத்தில் மேற்கு முனையப் பகுதியில் (அதானி துறைமுகக் குழுமம்) கட்டுமானப் பணிகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகின்றன. எனவே சிலர் இதைப்பற்றிக் குறிப்பிடுவது சரியானதல்ல.
மின் உற்பத்தி திட்டம் தொடர்பாக அதானி குழுமம் மற்றொரு கடிதத்தை அனுப்பியுள்ளது. மீண்டும் இது தொடர்பாகப் பேசலாம் என்று குறிப்பிட்டுள்ளது. உற்பத்தியாகும் மின்சாரத்தின் விற்பனை விலையைக் குறைத்தால் பேசலாம் என்று தெரிவித்துள்ளோம்.
“யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” என்ற முதுமொழிக்கு ஏற்ப “அதானி குழுமம் முன்னே நரேந்திர மோடி பின்னே” என்பது உண்மையாகிவிட்டதல்லவா?
அமீத் ஷா மாயையில் சிக்கியுள்ள அஇஅதிமுக சட்டமன்றத் துணைத்தலைவர் உதயகுமார் மோடி டாடி கச்சத்தீவை மீட்பதற்குத்தான் செல்கிறார் என்று கூட கூறலாம் அல்லவா!
பேராசிரியர் மு. நாகநாதன்