
பிரதமர் மோடி கடந்த 11 ஆண்டுகளில் 72 நாடுகளுக்கு 151 முறை பயணம் செய்திருக்கிறார். அதாவது 132 மாதங்களில் சராசரியாக ஒரு மாதத்துக்கு ஒரு முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அமெரிக்காவுக்கு மட்டும் பத்து முறை போயிருக்கிறார்.
காங்கிரசுக் கட்சியின் தலைவர் திரு. மல்லிகர்ஜூன் கார்கே இந்த புள்ளிவிபரத்தை வெளியிட்டப் (தி இந்து, மே 21, 2025) பிறகும் ஓரிரு முறை வெளிநாடுகளுக்குப் போய் வந்திருக்கிறார். இத்தனை முறை பிரதமர் இன்பச் சுற்றுலா போய்வந்த பிறகும், இந்தியாவுக்குக் கிடைத்த லாபம் என்ன? ஜீரோ! பூஜ்யம்! ஒன்றுமில்லை!
பாகிஸ்தானை உலக அரங்கில் தனிமைப்படுத்த முடியவில்லை. அந்நாட்டுக்கு பன்னாட்டு நிதியங்கள் அளித்த மாபெரும் கடன்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. அண்மைப் போர் (போன்ற) நடவடிக்கையில் எந்த பெரிய நாடும் இந்தியாவுக்காக வரிந்துகட்டிக் கொண்டு வந்து நிற்கவில்லை. உண்மையில், பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களால் அவரைத் தவிர யாரும் லாபம் அடையவில்லை. மனிதர் அனுபவிக்கிறார்!
கார்கே அவர்களின் வெளிநாட்டுப் பயணம் பற்றிய அதிரடிக் கருத்து வெளி வந்தவுடன் மோடி அரசு ஒரு திட்டத்தை அவசரம் அவசரமாக அறிவித்தது. இந்த வீணான வெளிநாட்டு இன்பச்சுற்றுலாப் பிரச்சினையை வேறு அரசியல் கட்சிகளும் பேசக் கூடாது, மேற்படி மாபெரும் தேசிய விரயம் பற்றிய நாடு தழுவிய விவாதம் எழக்கூடாது என்றெண்ணிய மோடி அரசு, போரில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றி வெளிநாட்டுத் தலைவர்களுக்கு விளக்கிச் சொல்வதற்காக எம்.பி.க்கள் குழுக்களை உருவாக்கி, உலக நாடுகள் பலவற்றுக்கும் அனுப்பியது. 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 32 நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார்கள். விமானக் கட்டணம், தங்கும் செலவு, உணவுச் செலவு, உள்நாட்டுப் போக்குவரத்து, அது, இது என்று கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஒரு மாபெரும் தொகையை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறார்கள்.
இவற்றுள் பெரும்பாலான நாடுகளில் இந்தியத் தூதரகங்கள் இருக்கின்றன. நன்றாக கற்றுணர்ந்த இந்தியத் தூதர் உட்பட பத்துக்கணக்கான அதிகாரிகள் அத்தூதரகங்களில் வேலை செய்கிறார்கள். அனைவரும் ஆங்கிலம், மற்றும் உலக மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர்கள். அவரவர் பணிபுரியும் நாட்டுத் தலைவர்கள் அனைவரையும் நன்கு அறிந்தவர்கள். ஆக, இந்தியத் தூதர்கள் தத்தம் நாடுகளின் தலைவர்களை எளிதில் சந்தித்து, இந்தியாவின் நிலைப்பாட்டை, பாகிஸ்தானின் தீவிரவாத அச்சுறுத்தலை எளிதாக விலாவாரியாக விளக்கிச் சொல்லியிருக்க முடியும்.
பிறகு எதற்கு மேற்படி எம்.பி.க்கள் குழு? அக்குழுக்களில் இடம்பெற்ற எம்.பி.க்களில் பலருக்கும் ஆங்கிலம் பேசத் தெரியாது. உலக வரைபடமே சிலருக்குத் தெரிந்திருக்காது. இவர்கள் சென்ற நாடுகளின் வரலாறோ, அரசியல் அமைப்போ எதுமே புரிந்திருக்காது. இவர்கள் போய் பேசி என்ன சாதித்தார்கள்? இந்திய மக்களின் வரிப்பணத்தில் இன்பமாய் சுற்றிவிட்டு வந்திருக்கிறார்கள். இவர்களின் பயணத்தால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் என்ன பயன்? ஜீரோ! பூஜ்யம்! ஒன்றுமில்லை!
என்ன, இனிமேல் மோடி வெளிநாட்டுக்குப் போகும்போது யாரும் வாய் திறக்க மாட்டார்கள். நீயும்தானே போனாய் என்று அரசு கேட்குமல்லவா? இந்த எம்.பி.க்கள் இன்பச் சுற்றுலா சென்று வந்ததன் மொத்தச் செலவு எவ்வளவு? ஏதாவது கணக்கு இருக்கிறதா? யாராவது எம்.பி.க்கள் இது பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பார்களா? மாட்டார்கள்.
எல்லா கோடீஸ்வரர்களும் ஒரே இனம்தானே? மேலும் எதிர்காலத்தில் தங்களுக்கு வரவிருக்கும் வாய்ப்பைக் கெடுத்துக் கொள்வானேன் என்றெண்ணி கடந்து செல்வார்கள்.
பத்திரிகைகளும், பத்திரிகைக்காரர்களும் கூட எதுவும் எழுத மாட்டார்கள். காரணம் இவர்களில் பலரும் அவ்வப்போது பிரதமருடன் இன்பச் சுற்றுலா செல்கிறவர்கள்தான்.
ஒரு வேளைச் சோற்றுக்கு மாடாய் உழைத்து, ஓடாய்த் தேயும் சராசரி இந்தியனுக்கு இவர்களின் இன்பச் சுற்றுலாக்கள் பற்றியும், பண விரயம் பற்றியும் எதுவும் தெரியாது.
பிரதமர் மோடி தன்னுடைய வெளிநாட்டுப் பயணங்களை இனிமேல் குறைத்துக் கொள்ள வேண்டும். மோடி போலவே அதிகமாகப் பயணிக்கும் வெளியுறவுத் துறை அமைச்சரும் வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். உலக நாடுகளில் நடக்கும் எல்லாக் கூட்டங்களுக்கும் அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் தவறாது சென்று ஆஜராகி, அங்கே வந்திருக்கும் உலகத் தலைவர்களை எல்லாம் முண்டியடித்து, வலியச் சென்று, கட்டித்தழுவி படம் காட்ட வேண்டியத் தேவை இனி இல்லை.
உங்களுக்கெல்லாம் எந்தத் தலைவரையும் நெருக்கமாகத் தெரியாது, யாரும் உங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதையெல்லாம் இந்திய மக்கள் நன்றாகத் தெரிந்து கொண்டோம்.
ஓர் அரசு ஊழியர், தனிப்பட்டக் காரணங்களுக்காக, சொந்தச் செலவில் வெளிநாட்டுக்குப் போக வேண்டுமென்றால்கூட, உயர் அதிகாரிகளின், அரசின் அனுமதியைப் பெற வேண்டும். அதேபோல, பிரதமர், அமைச்சர்கள் போன்றோர் மக்கள் பணத்தில் வெளிநாட்டுக்குப் போக வேண்டுமென்றால் நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்று சட்டமியற்றுவோம். எங்கேப் போகிறாய், ஏன் போகிறாய், எவ்வளவு செலவு ஆகும், இந்தப் பயணத்தால் நாட்டுக்கு என்ன பயன் கிடைக்கும் என்று மக்கள் (பிரதிநிதிகள்) கேள்விகள் கேட்டு அனுமதி கொடுத்தால் போனால் போதும். அல்லது அலுவலகத்தில் உட்கார்ந்து வேலையைப் பாருங்கள் என்று சொல்வோம்.
கோவணம் இல்லாமல் தவித்தானாம் அப்பன்,
குளிருக்கு போர்வை தாவென்று அழுதானாம் பிள்ளை. நாட்டு மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை செய்து கொடுக்க வக்கில்லை. இந்த லட்சணத்தில் இன்பச்சுற்றுலாப் போகிறார்கள் இந்தியப் பெருந்தலைவர்கள்!
சுப. உதயகுமாரன்