
-கெளசல்யா மாதேஸ்வரன்
சாதிஒழிப்பு , திராவிடம் , தமிழ்த்தேசியம் ,பெண்ணுரிமை ,இந்துமத எதிர்ப்பு போன்ற மிகநுட்பமான அரசியல் கொள்கைகளை ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து முதன் முதலில் கையில் எடுத்து பல சீர்திருத்தங்களை செய்து காட்டியவர் அயோத்திதாச பண்டிதர் .
அயோத்திதாச பண்டிதரின் இயற்பெயர் காத்தவராயன். அயோத்திதாச பண்டிதர் மே 20, 1845-ல் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள மக்கிமா நகரில் கந்தசாமிக்கு பிறந்தார்.அயோத்திதாசர் தனது தந்தையிடமும், காசிமேடு சதாவதானி வைரக்கண் வேலாயுதம் புலவரிடமும் மெட்ராஸ் ப்ளாக் டவுன் பகுதியில் வாழ்ந்துவந்த வல்லக்காளத்தி வீ. அயோத்திதாசப் பண்டிதரிடமும் பரங்கிமலை பத்ர தேசிகானந்த அடிகளிடமும் கல்வி கற்றார். தமிழ், சித்த மருத்துவம், தத்துவம் ஆகியவற்றில் புலமை கொண்டார். ஆங்கிலம், வடமொழி, பாலி போன்ற மொழிகளில் புலமை பெற்றவர். தன் குருவின் மீது கொண்ட மதிப்பால் ‘காத்தவராயன்’ என்ற தனது பெயரை ‘அயோத்திதாசர்’ என மாற்றிக் கொண்டார்.
அயோத்தி தாசர் இளமையிலேயே தலித் அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1859-ல் தலித் மக்களின் முதல் இதழான ‘சூர்யோதயம்’ தொடங்கப்பட்டது. வேங்கிடசாமிப் பண்டிதர் இவ்விதழை நடத்தினார். 1871-ல் ‘பஞ்சமன்’ இதழ் வெளிவந்தது. இவ்விதழ்களை அயோத்தி தாசர் பயின்றுவந்தார்.
‘தலித் மக்களை பறையர் என்று அழைப்பது குற்றம்’ , ஆதிதிராவிடர் என்று அழையுங்கள் !
அயோத்திதாச பண்டிதர் ‘திராவிட மகாஜன சபை’யை நிறுவினார். டிசம்பர் 1891-ல் திராவிட மகாஜன சபையின் சார்பாக, ஊட்டியில் மாநாடு நடத்தப்பட்டது. இதில், “பறையர் எனக் கூறுவது குற்றம் எனச் சட்டம் இயற்ற வேண்டும், பொது இடங்களில் நுழைய உரிமை அளிக்க வேண்டும், கல்வி வசதி செய்துதர வேண்டும்” என்பன உள்ளிட்ட பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு காங்கிரஸ் செயலாளர் எம்.வீரராகவாச்சாரியாருக்கு டிசம்பர் 21, 1891 அன்று அனுப்பப்பட்டது. நகல் பிரிட்டிஷ் அரசுக்கும் அனுப்பப்பட்டது. இந்த மாநாட்டில்தான் தலித் மக்களைக் குறிக்க ‘ஆதிதிராவிடர்’ என்னும் சொல்லை அயோத்திதாசர் முதல்முறையாகப் பயன்படுத்தினார்.
பஞ்சமி நிலம் உருவாக காரணமாக இருந்தவர்
ஏப்ரல் 1892-ல் சென்னை விக்டோரியா அரங்கில் நடைபெற்ற சென்னை மகாஜன சபை மாநாட்டில், நீலகிரி மாவட்டத்தின் பிரதிநிதியாக அயோத்திதாசர் கலந்துகொண்டார். இம்மாநாட்டில்தான், ஒடுக்கப்பட்டோருக்கு இலவசக் கல்வி, புறம்போக்கு தரிசு நிலம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார். தாழ்த்தப்பட்டவர்களின் கோயில் நுழைவுக்கு அனுமதி கேட்டபோது மறுத்ததால் இலவசக் கல்வியும் நிலமற்றவர்களுக்கு நிலமும் கேட்டார்.
1893-ல் தாழ்த்தப்பட்டவர்களிடம் கல்வி பரவலாக்கப்பட வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டது. பஞ்சமி நிலம் உருவாக இந்த முன்னெடுப்பு காரணமாக அமைந்தது.
1894-ல் தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறினால்தான் பிரச்சினைகள் தீரும் என்று அரசுக்கு பரிந்துரை செய்த வருவாய்த்துறை தலைமை ஆய்வாளர் சீனிவாச ராகவ ஐயருக்கு ஒரு திறந்த மடலை எழுதி மதமாற்ற ஆலோசனையை அயோத்திதாசர் கண்டித்தார்
அக்டோபர் 30,1912 தேதியிட்ட இதழில் தமிழன் இதழில், இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தால் ஆதி தமிழர்களிடம் அரசியல் அதிகாரத்தை வழங்கவேண்டுமென ஆங்கிலேயர்களிடம் கோரிக்கை வைத்தார்.
சாதி பேதமற்ற திராவிடனே தமிழன்
அயோத்திதாசர் தமிழர்களை சாதிபேதமற்ற திராவிடர்கள், சாதி பேதமுள்ளவர்கள் என இருவகையாக பிரிக்கிறார். சாதிபேதமற்ற ஆதிதிராவிடகர்கள் பழங்காலத்தில் பௌத்தர்களாக இருந்து பின்னர் ஒடுக்கப்பட்டவர்கள் என்று கூறினார்.தமிழன் என்றால் “சாதி பேதமற்ற திராவிடனே தமிழன்” என்கின்ற வரையறையை அவர் வைத்திருந்தார்.
இன்று பிராமணர்களாக அறியப்படுபவர்கள் உண்மையான பிராமணர்கள் அல்ல, அவர்கள் பிராமணர்களாக வேசம்போடுகிறார்கள் என்று அயோத்திதாசர் சொன்னார். உண்மையான பிராமணர்கள் உயிர்களிடன் அன்பும் உலகம் முழுக்க தங்கள் உறவு எனக்கருதும் பார்வையும் கொண்டவர்கள். வரலாற்றில் ஒரு கட்டத்தில் பிராமண அடையாளம் கொண்ட ஒரு தரப்பினர் அதிகாரத்தைக் கைப்பற்றினர் என வாதிடுகிறார் .
அயோத்திதாசர் மேற்கத்திய முறையிலான கல்விக்காக குரல்கொடுத்தார்.
இட ஒதுக்கீடு
1892-ல் நீலகிரி மாநாட்டு தீர்மானத்திலேயே அயோத்திதாசர் இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவ உரிமையை வலியுறுத்தினார்
பெண் உரிமை
ஆணுக்கும் பெண்ணுக்கும் சட்டபூர்வமான சம உரிமை தேவை என்பதை அயோத்திதாசர் வலியுறுத்திவந்தார். கைம்பெண் மறுமணம், பெண்களுக்கு தொழில்கல்வி ஆகியவற்றை கோரினார்.
இந்துமத எதிர்ப்பு
இந்து என்பது பௌத்தர்களின் பெயரான இந்தியம் என்பதில் இருந்து வந்தது என்றும், இந்திரர் தேசம் என்னும் பொருளில் இந்தியா அழைக்கப்பட்டது என்றும், இங்கே குடியேறிய சூழ்ச்சிக்காரர்கள் இந்து என்ற பெயரை திருடிக்கொண்டார்கள் என்றும் அயோத்திதாசர் குறிப்பிட்டுள்ளார் . இந்து புராணங்கள், திருவிழாக்கள், சடங்குகள் எல்லாமே பௌத்தர்களிடமிருந்து திருடிக்கொண்டு திரிக்கப்பட்டவை என்றார். இந்து மூடநம்பிக்கைகளை கடுமையாகக் கண்டித்தார்.
ஒரு பைசா தமிழன்
1907-ம் ஆண்டு ‘ஒரு பைசா தமிழன்’ என்கிற இதழைத் தொடங்கினார் அயோத்திதாசர். இந்த இதழ் ஓராண்டு காலம் நடைபெற்றது. ஒரு பைசா தமிழன் என்றால் ஒரு பைசாவுக்கு கூட மதிப்பதில்லாத தமிழன் என்று பொருள். அந்த அளவுக்கு அன்றைக்கு தமிழன் என்றால் மரியாதை குறைவு என்ற சூழல். அந்த சிந்தனையை மாற்றி, ஒரு பைசாவுக்குக் கூட மதிப்பில்லாத தமிழனாக கருதப்படுகிறவன் எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவன் தான் என்கின்ற பொருள்பட ‘ஒரு பைசா தமிழன்’ என்று பெயர் வைத்திருந்தார். எனவே தமிழன் என்கின்ற சொல்லாடலைத் தமிழ்ச் சமூகம் அன்றைக்கு எவ்வளவு மோசமாக நினைத்துக் கொண்டிருந்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு பைசா தமிழன் என்கின்ற இந்தச் சொல்லாடல் உருவாக்கப்படுவதற்கு முன்பும் சரி பின்பும் சரி, தமிழன் என்ற அடையாளத்தைத் தமிழ்பேசும் சமூகங்கள் அன்றைக்கு விரும்பவே இல்லை. ஓர் ஒற்றை பொது அடையாளத்துக்குள் வந்தால் தாங்கள் கடைபிடித்துக் கொண்டிருக்கக்கூடிய சாதிபேத அடையாளங்களை முற்றிலும் இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தினால் தமிழன் என்கிற அடையாளத்துக்குள் தமிழர்கள் வரத் தயங்கினார்கள். அதைக் குத்திக்காட்டும் விதமாகத்தான் அயோத்திதாச பண்டிதர் அவர்கள் ஒரு பைசா தமிழன் என்கின்ற பெயரை வைத்து இதழைத் தொடங்கி நடத்தினார். அவர் எதிர்பார்த்தது போலவே பல்வேறு தளங்களிலிருந்து கடிதங்கள் அவருக்கு வந்தன. ஒரு பைசா தமிழன் என்கின்ற சொல் சரியானது அல்ல, அதை நீங்கள் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர் வாசகர்கள்.அதன்படி வாசகர்களின் கோரிக்கையை ஏற்று பத்திரிகையின் பெயரை 1908-ம் ஆண்டு ‘தமிழன்’ என மாற்றி அமைத்தார்.
இந்திய வரலாற்றில் குறிப்பாக 1920-ம் நூற்றாண்டுகளில் எந்தப் பெயரை சொல்ல மக்கள் தயங்கினார்களோ அதே பெயரை வைக்க வேண்டும் என அந்த மக்களே கோரிக்கை வைக்கக்கூடிய அளவுக்குக் கொண்டு வந்ததுதான் அயோத்திதாச பண்டிதரின் மிகப்பெரிய சாதனை. தமிழன் என்கின்ற சமூக அரசியல் அடையாளத்தை அயோத்திதாச பண்டிதர் நிலைநாட்டி விட்டாலும், யாரெல்லாம் தமிழராக இருக்க முடியும் என்கின்ற வரையறையையும் அவர் அதில் சேர்த்து வைத்திருந்தார். தமிழன் என்றால் “சாதி பேதமற்ற திராவிடனே தமிழன்” என்கின்ற வரையறையை அவர் வைத்திருந்தார்.
அவரைப் பொறுத்தவரையில் திராவிடம் என்பது இன ரீதியான பெயர் அல்ல; பௌத்த அடிப்படையில் பொருள் புரிந்து கொண்ட தீராவிடம் (தீரா விஷம்) என்கின்ற சொல்லின் தொடர்ச்சியாகவே அதைப் பார்த்தார். சாதி பேதமற்ற திராவிடர்கள் தான் தமிழர்கள் என்பது அயோத்திதாச பண்டிதரின் வரையறுப்பு என்றால், தமிழர்களின் ஆதி அடையாளம் சாதி பேதமற்ற நிலை அவர் காலத்திய சாதிய அடையாளங்களோடு நேரடியாக மோதியது தனது கருத்தியல் அடித்தளத்தைத் தமிழன் இதழின் வாயிலாக மிக விரிவாக அவர் உருவாக்கினார். விளைவாக பிற்காலத்தில் தமிழன் மற்றும் திராவிடம் என்கிற இரண்டு சொற்களும் அரசியல் அரங்கில் முதன்மை இடத்தைப் பிடித்தன. ஆனால் அவையிரண்டும் தனித்தனி பொருளில் புரிந்து கொள்ளப்பட்டு அவை பெரும் அரசியல் இயக்கங்களாக தமிழகத்தின் அரசியல் அடித்தளத்தை நிர்ணயிக்கும் இயக்கங்களாக உருவாகியுள்ளது .
இந்தப் பத்திரிகையில் தொடர்ந்து, பிராமணிய சிந்தனைகளுக்கு எதிரான கட்டுரைகளை எழுதிவந்தார் அயோத்திதாசர். அதன்மூலம், இந்திய வரலாற்றையே அவர் மறுகட்டமைப்பு செய்தார் எனலாம். இது பல தரப்பிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கார்த்திகை தீபம், தீபாவளி, பொங்கல், திருமணச் சடங்கு, இறுதிச் சடங்கு உள்ளிட்ட சடங்குகள் எல்லாம் பவுத்தம் வசம் இருந்தவை என்றும் காலப்போக்கில், இவையெல்லாம் எப்படி இந்துமயமானது என்பதையும் விளக்கி எழுதினார்.
இதே காலகட்டத்தில் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையுடன் கடும் வார்த்தைப் போர்களையும் நடத்தியுள்ளார். ‘சுதேசமித்திரன்’ ஆசிரியர் பாரதியாருக்கும் அயோத்திதாசருக்கும் இடையே காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளது என கூறப்படுகிறது .
இவரின் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை கவுரவப்படுத்துவதற்காக 2005-ம் ஆண்டு தாம்பரத்தில் அயோத்திதாசர் ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டது.அக்டோபர் 21, 2005-ல் அயோத்திதாசருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.அயோத்திதாசர் நடத்திய ‘ஒரு பைசாத் தமிழன்’ இதழின் நூற்றாண்டு விழாவை, 2008-ல் சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி மிகப்பெரிய அளவில் அரசு விழாவாகக் கொண்டாடினார். இவரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன. அவரின் வாரிசுகளுக்குப் பத்து லட்சம் ரூபாய் நிதியும் 2008-ல் வழங்கப்பட்டது.2019-ம் ஆண்டு, சமத்துவம், பொதுவுடைமை, தமிழியல் போன்ற துறைகளில் முத்திரை பதித்தவர்களுக்கு, ‘அயோத்திதாசப் பண்டிதர் விருது’ வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தமிழாக்க அரசு அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைத்தது .
சாதிஒழிப்பு, திராவிடம், தமிழ்த்தேசியம் ,பெண்ணுரிமை ,இந்துமத எதிர்ப்பு ,பெண்கள் மறுமணம் போன்ற சீர்திருத்தங்களை செய்து “தென்னிந்தியாவின் சீர்திருத்த தந்தை” என அழைக்கப்பட்டார் .எனவே,இன்றைய தமிழக அரசியலை புரிந்துகொள்வதற்கு இவரை பற்றி இன்றைய தலைமுறைகள் மிக அவசியமாக தெரிந்து கொள்ளவேண்டும். .