போர் சூழலில் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில், இருந்து வருகின்றோம். சென்ற ஆண்டு பொறுப்பேற்ற அரசு தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தும் நோக்கில் குழு அமைத்து, குழுவினரும், அதிகாரிகளும் செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இலங்கையில் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார சிக்கலால், தாயகத்திலிருந்து கடந்த சில நாட்களாக மக்கள் உயிரை பணையம் வைத்து தமிழகத்தை நோக்கி வருகின்றனர். அவ்வாறு வந்தவர்களில் முதலில் வந்தவர்கள் கைது செய்யப்பட்டதும், தற்பொழுது அவர்களும் விடுவிக்கப்பட்டு உள்ளார்கள் என்பதை அறிய முடிகின்றது. இந்த நிலையில் அதன் பின் வந்தவர்களை தமிழக அரசு அதிகாரிகள் அவர்களை மண்டபம் முகாமில் வீடுகளை ஒதுக்கி அவர்களுக்கு தேவையான உதவிகளை அளித்துள்ளார்கள். மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படியும், தமிழ்நாடு அரசின் மறுவாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. செஞ்ஜி மஸ்தான் அவர்களின் ஆலோசனைப்படி மறுவாழ்வு துறையின் ஆணையர் அவர்கள், உடனடியாக ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் படகில் வந்த இலங்கை தமிழர்கள் குறித்த விவரங்களையும், அவர்களின் சூழலையும் நேரில் கேட்டறிந்தார் என்பது எங்களுக்கு ஆறுதல் செய்தியாக உள்ளது. இன்று சட்டமன்றத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான திரு ஆளூர் ஷாநவாஸ் அவர்களும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் சட்டமன்ற உறுப்பினருமான திரு.பண்ருட்டி வேல்முருகன் அவர்களும், இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து பேரவைத் தலைவரிடம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து உள்ளார்கள் என்று அறியமுடிகிறது. இக்கட்டான நேரங்களில் எப்பொழுதும் எங்களுக்கு துணைநிற்கும், தமிழக உறவுகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும், சமூக செயல்பாட்டாளர்களுக்கும், தமிழக வாழ் இலங்கை தமிழ் ஏதிலியர் மன்றம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வி.மோகன் தாஸ், ஒருங்கிணைப்பாளர், தமிழக வாழ் இலங்கை தமிழ் ஏதிலியர் மன்றம் தொடர்புக்கு. +91 78689 51535

