விபத்தில் சிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நிவாரண தொகை வழங்கும் புதிய திட்டம், தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று சென்னையில் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் கொண்டுவரப்படாத புதிய திட்டமாக விபத்தில் சிக்கும் மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கும் முறையை கொண்டு வர முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் தலைமையின் கீழ் செயல்படும் பள்ளிக்கல்வி துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
அதன்படி, பள்ளி மாணவர் விபத்தில் இறந்தால் ரூ.1 லட்சம், பெரிய காயம் ஏற்பட்டால் ரூ.50 ஆயிரம், சிறிய காயம் ஏற்பட்டால் ரூ.25 ஆயிரம் கொடுக்கப்படும் என்றும், இந்த தொகை ‘இன்சூரன்ஸ் பாலிசி’ என்பதன் மூலம் வழங்கப்படுவது கிடையாது என்றும், இந்த தொகை சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.